நாட்டின் பல பிரதேசங்களில் வௌ்ளம்; மண் சரிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதானம்
நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையால் பல்வேறு மாவட்டங்களில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளன.
கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றில் நீர் நிரம்பியுள்ளதால் இந்த வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
கிங் கங்கை நிரம்பியுள்ளதால் காலி மாவட்டத்தில் பத்தேகம, தவலம, நாகொட, வெலிவிட்டிய மற்றும் திவுதுர போன்ற பிரதேசங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதுடன், மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நில்வலா கங்கையை அண்மித்த பள்ளமான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், கொக்மாதுவ, மாலிம்மட, அக்குரஸ்ஸ போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாரு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
நில்வலா கங்கையில் நீர் நிரம்பியுள்ளதால் பிட்டபத்தர, ஊராவ, பானதுவ பிரதேசங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
அதேவேளை வெலிகம - இமதுவ வீதி உள்ளிட்ட பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இதேவேளை களுகங்கையிலும் நீர் நிரம்பியுள்ளதுடன் வௌ்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரத்தினபுரி மற்றும் களுத்துறை பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
கடுவலை, கொட்டிகாவத்த, களனி, களனிமுள்ள, கொலொன்னாவை, தொம்பே, ஹங்வெல்ல, பாதுக்க, அவிஸ்ஸாவெல்ல போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
இது தவிர பல்வேறு பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களில் இந்த அபாயம் இருப்பதாக அந்த நிலையம் கூறியுள்ளது.
இந்நிலையில் சப்புகஸ்கந்த, ஹெய்ந்தூவ பகுதியில் வீடு ஒன்றின் மீது மண் திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இரண்டு பெண்கள் பலியாகினர்.
இதேவேளை, தெவினுவர பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு மண்சரிவு அனர்த்தத்தில் இன்னொரு பெண்ணும் உயிரிழந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை நாட்டில் நிலவுகின்ற அசாதாராண காலநிலை காரணமாக ஏற்படுகின்ற இடர் நிலமைகளுக்கு முகங்கொடுப்பது சம்பந்தமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி கூறியுள்ளார்.
























